தமிழின் கவிதை இயக்கத்தை பற்றி பல்வேறு நூல்களை வாசித்த போது, பிரதானமாக ஈழத்தின் கவிதை இயக்கமும் தமிழுக்கு அம்மண்ணின் பங்களிப்பும் சொல்வதற்கரிது. திரு. ராஜமார்த்தாண்டனின் “புதுக்கவிதை வரலாறு” நூலில் பரவலாய் சிதறிக்கிடந்த கருத்துக்களை தொகுத்து வாசித்த போதும்,  இணையத்தின் நூலகம்.காம் இணைய தளத்தில் ஈழத்தின் பல்வேறு இலக்கிய வரலாறுகளை ஒப்பிட்ட போதும் தோன்றிய முயற்சியே இக்கட்டுரை.

ஈழத்து நவீன இலக்கியம்  (செ. யோகராசா [http://noolaham.net/project/01/41/41.htm])
என்ற நூலில் குறிப்பிடப்பட்ட கருத்துக்கள் இந்தக் கட்டுரையில் வரும் கருத்துக்களோடு முரண்படுகிறது. இருப்பினும் இவ்விரண்டு நூல்களும் ஈழத்து கவிதை இயக்கத்தினைக் குறித்த இருவேறு கோணங்களை பதிவுசெய்கின்றன. இவை இரண்டுமே வாசித்தறியவேண்டியவை.

புதுக்கவிதையின் ஆரம்ப காலகட்டமாகிய முப்பது நாற்பதுகளில் தமிழகத்தில் புதுக்கவிதை முன்னோடியான ந. பிச்சமூர்த்தி 1934ல் எழுதிய “காதல்” என்னும் கவிதையே தமிழின் முதல் புதிய கவிதை. தொடர்ந்து தமிழகத்தின் இலக்கிய இதழ்களில் புதிய கவிதை முயற்சிகள் வெளிவந்தன. ஆனால் ஈழத்தில் 1943ல்தான் அத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 13.6.43ல் வெளிவந்த ஈழகேசரியில் ‘ஓர் இரவினிலே’ என்ற நீண்ட வசன கவிதையை வரதர் எழுதியிருந்தார். ஈழத்தில் வெளிவந்த ‘முதல் புதுக்கவிதை இது என்று கூறலாம்’ என்கிறார் வல்லிக்கண்ணன்.

இருள் ! இருள் ! இருள் !
இரவிலே நடு ஜாமத்திலே
என் கால்கள் தொடும் பூமி தொடங்கி
கண்பார்வைக் கெட்டாத மேகமண்டலம்வரை
இருள் ! இருள் ! இருள் !
பார்த்தேன்.
பேச்சு மூச்சற்று
பிணம்போல் கிடந்தது பூமி.
இது பூமி தானா?’

என தொடங்கும் வரதரின் இந்த கவிதைப் பகுதியை மேற்கோளாகக் காட்டி,. இதே காலகட்டத்தில் “கலாமோகினி”யில் பிச்சமூர்த்தி எழுதிய “மழைக்கூத்து” என்ற கவிதை, ‘வரதருக்கு இயற்கைக் கூத்துகளை விவரிக்கும் கவிதையை எழுதத் தூண்டுதலாக அமைந்திருக்கலாம்’ என்கிறார் வல்லிக்கண்ணன். ஈழத்துப் படைப்பாளிகளூக்கு தமிழகத்திலிருந்து வெளிவந்த இலக்கிய இதழ்களோடு தொடர்பு இருந்து வந்தது. கலாமோகினி, கிராம ஊழியன் இதழ்களில் அவர்களுடைய படைப்புகளும் வெளிவந்துள்ளன.

‘அகக்காரணிகளும் புறக்காரணிகளும் ஓன்றிணைந்தே நவீன ஈழத்துத் தமிழ்கவிதையை உருவாக்கியுள்ளன’ என்று கூறும் க. கைலாசபதி, புறக்காரணிகள் என்று குறிப்பிடுவது தமிழகத்துக் கவிதைகளின் தாக்கங்களைத்தான். ஈழத்தில் ‘புதிய அரசியல்-சமுதாய பாடல்கள் தோன்றுவதற்கு’ பாரதி பாடல்கள் தூண்டுகோலாய் அமைந்தன என்றும் அவர் கூறுகிறார் (பாரதி ஆய்வுகள் : ப.217) அது போல் ஈழத்தில் புதுக்கவிதை தோன்றுவதற்கும் தமிழகத்துக் கவிதைச் சூழல்தான் காரணம் என்று கூறலாம். கா. சிவத்தம்பியின் கருத்தும் இதனை உறுதிப்படுத்துகிறது. ‘ஈழத்தின் நவீன தமிழ்க் கவிதை 1942ல் தொடங்கப்பெற்ற “மறுமலர்ச்சி” சஞ்சிகையுடன் ஆரம்பமாகிறது. ஆனால் 1930ல் தொடங்கிய “ஈழகேசரி” காலம் முதலே கவிதையில் நவீனத்துவம் படிப்படியாக வளரத் தொடங்குகிறது. அல்வாய் மு.செல்லையா இவ்வகையில் முக்கியமாகிறார். மறுமலர்ச்சியுடன் தொடங்கும் கவிதைப்போக்கு பாரதியை மையமாகக் கொண்டது’ என்றும், ‘தமிழகத்தின் மறுமலர்ச்சி எழுத்தாளரான கு.ப.ரா, பிச்சமூர்த்தி ஆகியோரின் செல்வாக்குக்குட்பட்டே வசன கவிதை ஈழத்திலும் தொடங்குகிறது. (உ.ம்) வரதர். ஆனால், புதுக்கவிதையை அதன் இலட்சணப்பொலிவுடன் கையாளத் தொடங்கியவர்களுள் ஈழத்தைப் பொறுத்தவரை முக்கியமானவர் தா.ராமலிங்கம் ஆவார்’ என்றும் கா.சிவத்தம்பி கூறுகிறார். (புறநானூறு முதல் புதுக்கவிதை வரை: பக்.30-31)

ஆனால் ஈழத்தில் புதுக்கவிதை ‘சுத்த சுயம்பு’வாகத் தோன்றியது என்ற கருத்தும் அங்குண்டு. சி.சு.செல்லப்பாவின் “எழுத்து” இதழ் மூலம் தமிழகத்தில் புதுக்கவிதை ஓர் இயக்கமாக வளர்ந்து இலக்கிய வடிவங்களில் ஒன்றாக அங்கீகாரம் பெற்றுவிட்டதைக் குறிப்பிடும் சோமகாந்தன், ‘ஆனால் புதுக்கவிதை என்று பேசப்படுவதற்கு பல காலத்துக்கு முன்னரே “மறுமலர்ச்சி”யில் வரதர் இவ்வாறான சில கவிதைப் பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட்டிருந்ததை எத்தனை இலக்கியவாதிகள் அறிவர்?’ என்கிறார். (நிகழ்வுகளும் நினைவுகளும்: ப.154). முப்பதுகள் நாற்பதுகளில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட புதிய கவிதை முயற்சிகளை அறியாததன் விளைவாக எழுந்த கேள்வியே இது.

ஈழத்தில் புதுக்கவிதை முயற்சி தொடங்கப்பட்டுச் சில ஆண்டுகளிலேயே ‘சோர்வுற்றுத் தூக்கநிலை அனுபவித்த’தாகவும் இதற்குக் காரணம் தமிழகத்தைப் போலவே புதிய கவிதை முயற்சிகளுக்கு ஆதரவளித்த இலக்கிய இதழ்களின் மறைவும் படைப்பாளிகளின் சோர்வு மனப்பான்மையுமே காரணம் என்கிறார் வல்லிக்கண்ணன்.

நாற்பதுகளின் ஆரம்பத்தில் ஈழத்தில் வரதர், சோ.தியாகராஜர், அ.செ.முருகானந்தன், அ.நா.கந்தசாமி, நாவற்குழியூர் நடராசன், மஹாகவி போன்றவர்கள் “மறுமலர்ச்சி” என்ற இலக்கிய இதழையும் இரண்டாண்டுகள் நடத்தினர். ஈழத்தில் புதிய சிறுகதை முயற்சிக்கு இது களமாக அமைந்ததாகக் கூறப்படுகிறது. இந்த மறுமலர்ச்சிக் குழுவினரில் வரதர், சோ.தியாகராஜா (ஜோதி), விஜயன், தங்கம் போன்றவர்களே ஈழத்தில் புதிய கவிதை முயற்சியில் குறிப்பிடத்தகுந்தவர்கள் என்கிறார் வல்லிக்கண்ணன்.

“மறுமலர்ச்சிக் கவிஞர்கள்” என்று குறிப்பிடப்படுபவர்கள் நாவற்குழியூர் நடராசன், சோ.தியாகராஜா, அ.நா.கந்தசாமி, மஹாகவி, சாரதா, க.இ.சரவணமுத்து முதலியோர் ஆவர் என்றும் ‘இவர்களுள் நாவற்குழியூர் நடராசன், அ.நா.கந்தசாமி, மஹாகவி ஆகிய மூவரும் முக்கியமான கவிஞர்களாகின்றனர்’ என்றும் கூறுகிறார் கா.சிவத்தம்பி. (புறநானூறு முதல் புதுக்கவிதை வரை; ப.31). இவர்களில் நாவற்குழியூர் நடராசன் கவிதைகள் உருவ அமைப்பில் மரபுவழிக் கவிதைகளாகவே உள்ளன. ‘ஈழத்தின் சிறந்த மரபு கவிஞர்களில்’ ஒருவராகவே இவரைச் சிலோன் விஜயேந்திரனும் குறிப்பிடுகிறார். (ஈழத்துக் கவிதை நயம் : ப.107). நாற்பதுகளிலேயே எழுதத் தொடங்கினாலும் ஐம்பதுகள் அறுபதுகளில்தான் மஹாகவி ஈழத்தின் முதன்மையான நவீன கவிஞராகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறார்.

தமிழகத்தில் புதுக்கவிதையின் தொடக்கக் காலத்தில் சிறுகதைப் படைப்பாளிகளான பிச்சமூர்த்தி, கு.ப.ரா, புதுமைப்பித்தன், க.நா.சு போன்றவர்கள் புதிய கவிதை முயற்சியில் ஈடுபட்டனர். கவிதை என்றால் யாப்பிலக்கணத்தில் எழுதப்படுவதுதான் என்ற பண்டித மனோபாவத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திக் கவிதைப்போக்கில் ஒரு சுதந்திரமான தாக்கத்தை ஏற்படுத்த இவர்களால் முடிந்தது. ஆனால் ஈழத்தில் இத்தகைய இலக்கிய ஆளுமை பெற்றவர்கள் புதிய கவிதை முயற்சியை மேற்கொள்ளவில்லை. எனவே நாற்பதுகளின் ஆரம்பத்தில் அங்கு மேற்கொள்ளப்பட்ட புதிய கவிதை முயற்சி ஈழத்துக் கவிதைச் சூழலில் எவ்விததாக்கத்தையும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. ஐம்பதுகளின் இறுதியில் தமிழகத்தில் சி.சு.செல்லப்பாவின் “எழுத்து” இலக்கிய இதழ் தோன்றிப் புதுக்கவிதை வளர்ச்சியடைந்த பின்னரே ஈழத்தில் அதன் பரவலான தாக்கமும் எதிர்வினையும் தீவிரமடைந்தது.

பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தமிழகத்துப் புதுக்கவிதை முயற்சிகளில் ஏற்பட்ட தேக்கநிலையை உடைத்துக்கொண்டு புதுக்கவிதை மறுமலர்ச்சியடைந்தது. “எழுத்து” காலகட்டத்தில் புதுக்கவிதை ஓர் இயக்கமாகவும் வளர்ந்து வலுப்பெற்றது. ஆனால் இதே காலகட்டத்தில்-அறுபதுகளில்-ஈழத்தில் புதுக்கவிதை வளர்ச்சி தமிழகம் அளவுக்கு சிறப்பாக இல்லை. மஹாகவியின் மரபு சார்ந்த புதிய கவிதை முயற்சி மற்றும் கைலாசபதி போன்ற முற்போக்கு விமர்சகர்களின் தமிழகத்துப் புதுக்கவிதைப் போக்குக்கு எதிரான கருத்துக்கள் இதன் காரணங்கள் எனலாம்.

‘1950, 65 இயக்க வேகத்துடன் தொடங்கப்பட்ட இலக்கிய இயக்கம் இலங்கையில் தோன்றும் தமிழிலக்கியம், இலங்கையை, இலங்கையின் பிரச்சனைகளை, அவற்றுக்குரிய ‘மண்வாசனை’யுடன் வெளிக்கொணருவனவாக இருத்தல் வேண்டுமென்பதையும் வற்புறுத்திற்று. தேசிய இலக்கியம் என்ற கோட்பாட்டை வளர்த்தெடுப்பதற்கு இவ்வியக்கம் காரணமாக அமைந்தது. ‘தேசிய இலக்கியம்’, மண்வாசனை’ உடையதாக ‘யதார்த்த’ அடிப்படை யிலானதாகவிருத்தல் வேண்டும் என்பது பல்வேறு விவாதங்கள் மூலம் நிலைநிறுத்தப்பட்டது’ என்று அறுபதுகள் காலகட்ட ஈழத்து இலக்கிய போக்கைக் குறுப்பிடுகிறார் கா.சிவத்தம்பி. (ஈழத்து இலக்கியத் தடம்; 1980-2000. ப.30)

இந்தக் காலகட்டத்தில் தமிழகத்தில் பாரதி- பாரதிதாசன் வழிக்கவிஞர், பரம்பரையினர் எழுதி வந்தது போன்ற தமிழ்த் தேசியம், பாரம்பரியப் பெருமைகளை விதந்தோதும் ஓசை நயம் மிகுந்த செய்யுள்களும் பாடல்களும் ஈழத்தில் எழுதப்பட்டன. எனினும் மஹாகவியின் கவிதைப் போக்கு, எவ்விதமான இயக்கம் சார்ந்தோ, பழம்பெருமைகளை பேசுவதாகவோ, கற்பனைகளில் பேசுவதாகவோ, கற்பனைகளில் மிதப்பதாகவோ அல்லாமல் மக்களின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகளை, சமூக முரண்பாடுகளை யதார்த்தமாகவும் அங்கதத்துடனும் சித்தரிப்பதாக அமைந்தது. அதற்கேற்ப அவர் மரபான செய்யுள் வடிவத்தைப் புறக்கணிக்காமல் பேச்சுவழக்குகளையும் பேச்சோசையையும் அதனுள் புகுத்தினார். தமிழகத்தில் கற்பனாவாத அலங்காரச் சொல்லடுக்குகளாகச் செய்யுள்களும் பாடல்களும் எழுதப்பட்ட காலத்தில் மஹாகவி யதார்த்தமான பார்வையில், இயல்பான பேச்சுமொழி நடையில் எழுதினார். இந்த புதிய கவிதைப்போக்கு ஈழத்து கவிதையில் பெரும் தாக்கத்தை நிகழ்வித்தது. தமிழகத்தில் இந்தக் காலகட்டத்தில் யாப்புருவத்தையும், எதுகை- மோனையில் உருவாகும் சப்த ஒழுங்கையும் கவனத்தில் கொள்ளாது, மௌன வாசிப்புக்குரிய புதுக்கவிதைகள் எழுதப்பட்ட சூழ்நிலைகளின் தொடக்கம் வரையிலும் ஈழத்துக் கவிதைகள் வாசிப்புக்குரிய வகையிலேயே சப்தநயம் தூக்கலாகக் கொண்ட நெகிழ்ச்சியான வடிவத்தில் அமைந்திருந்தமையும் கவனத்தில் கொள்ளவேண்டும். தமிழகத்தில் முப்பதுகள் மற்றும் நாற்பதுகளின் ஆரம்பத்தில் புதுமைப்பித்தன் யாப்புருவத்தை முற்றாகப் புறக்கணிக்காமல் பேச்சு வழக்கினையும் புகுத்தி புதியதொரு செய்யுள் நடையில் கவிதைகள் எழுதினார். மஹாகவியின் கவிதையமைப்பும் ஒருவகையில் புதுமைப்பித்தனுடையது போன்றதுதான். புதுமைப்பித்தனைப் போலவே நகைச்சுவை கலந்த கிண்டலான சமூக விமர்சனமும் மஹாகவி கவிதைகளின் முக்கியப் பண்பாகும்.

‘ஊரெல்லாம் கூடி ஒரு தேர் இழுக்கிறதே
வாருங்கள் நாமும் பிடிப்போம் வடத்தை
என்று
வந்தான் ஒருவன்.

வயிற்றில் உலகத்தாய்
நொந்து சுமந்திங்கு நூறாண்டு வாழ்வதற்காய்ப்
பெற்ற மகனே அவனும்’

இது மஹாகவியின் “தேரும் திங்களும்” கவிதையின் ஆரம்பப் பகுதி.

‘வயலினைப் பாலை
வனமாக்கு கின்ற
வெயிலுக்கு முன்னர் உழவர் விரைந்தெழுந்து
‘போயிலை’க்கு நீர் இறைக்கப்
போவார்கள்; போவழியில்
நாய்கள் விழித்துக்
குரைத்து நமை எழுப்பும்!
கோழிகளும் கொம்பிருந்து
கொட்டாவி விட்டெழுந்து
நாழியாய் விட்டதென
நாட்டுக் கறிவிக்கும்.’

இது “எங்கள் ஊர்” கவிதையின் ஆரம்பம்.

‘எண்ணம் எனக்குள்ள தொன்றே’
நீவீர்
ஏற்றுக்கொள் வீர்கள் எனில் மிக நன்றே!
உண்ணும் உணவினைப் போலே
நமக்கு
உற்ற தமிழ்! அதில் நாடகத்தாலே
திண்ணம், நிதி வந்து சேரும்
ஒன்றைத்
திட்டமிட்டுச் செய்வம்; யாவரும் வாரும்!
கண்ணியமும் கட்டுப்பாடும்
நல்ல
கடமையும் வெல்க! என்றாவன் நாடும்!’

இது “கண்மணியாள் காதை” காவியத்தில் வரும் ஒரு செய்யுள் பகுதி. இதுபோல் ஆசிரிய விருத்தப்பாவின் அடியினை, பேச்சுவழக்கின் தொனிக்கேற்பவும் அழுத்தம் கருதியும் உடைத்து, தனிச் சொல்லை வரியாக்கி அதேசமயம் யாப்புருவம் சிதையாமலும் மஹாகவி எழுதுவதுண்டு.  நாடகங்களிலும் தனிப் பாடல்களிலும் இந்த உத்தியினை அதிகமும் இவர் கையாண்டிருக்கிறார்.

மஹாகவியின் கவிதை இயக்கம் குறித்து இவ்வாறு கூறுகிறார் சண்முகம் சிவலிங்கம்:

‘மஹாகவி தேசிய மறுமலர்ச்சிக் காலத்து மத்திய தர வர்க்க முற்போக்குச் சிந்தனையை பிரதிபலித்தவர்.’

‘அன்றாட நிகழ்ச்சிகளினதும் அனுபவங்களினதும் அடிப்படையில் யதார்த்தபூர்வமாய், அல்லது மெய்மை சார்ந்து செய்யப்பட்ட படைப்புகள் மூலம் அந்த சிந்தனையைப் புலப்படுத்தியவர்.’

அந்த யதார்த்தபூர்வமான படைப்புக்குத் தேவையான முறையில் செய்யுள் நடையை ஒரு புதிய கட்டத்துக்கு வளர்த்தெடுத்தவர்.’ (மஹாகவியின் கொடை. ப.71)

இந்த காலகட்டத்தில் மஹாகவியின் “வள்ளி” (1955), “குறும்பா”(1966), “கண்மணியாள் காதை” (196 8) ஆகியவை நூல்களாக வெளிவந்துள்ளன.

ஈழத்துக் கவிதை விமர்சகர்களால் முக்கியமான கவிஞர்களில் ஒருவராகக் கருதப்படுகிறவர்ர் இ.முருகையன். ஐப்பதுகளில் எழுதத தொடங்கியவர். கவிதையின் உருவ அமைப்பில் பல சோதனை முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டவர். மஹாகவியைப் போலவே இவரும் செய்யுள் நடையில் பேச்சோசை வழக்கையும் கலந்து எழுதியவர். அவரைப்போலவே சப்த ஒழுங்கையும் புறக்கணிக்காதவர். தனிமனித உணர்வுகளைப் பிரதானப்படுத்தாமல் சமுதாயப் பிரச்சினைகளைத் தன் கவிதைகளில் முதன்மைப்படுத்தியவர். ஆரம்ப காலத்தில் புதுக்கவிதைக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டிருந்த போதிலும் காலமாறுதலுக்கேற்பப் புதுக்கவிதைகளும் எழுதத் தொடங்கியவர் முருகையன். இவரது “நெடும்பகல்” (1967) தொகுப்பிலுள்ளவை அனைத்தும் மரபுவழி உருவத்தில் அமைந்த கவிதைகள்தான். மரபார்ந்த செய்யுள் வடிவத்தில் முற்போக்குக் கருத்துருவங்களைக் கவிதையாக்கியவர் முருகையன்.

‘காற்றும், உயிர் நிறுத்த இயற்கை நல்கும்
காய்கதிர்ச் செல்வனது வெயிலொளியும்,
ஊற்று வழங்குகிற நீரும், எவையும்
உலகினர் யாவருக்கும் பொது அல்லவோ?
ஏற்றம் மிகுந்த அந்த இயற்கை தரும்
ஏனைய வற்றில் மட்டும் பேதம் எதற்கோ?
வேற்றுமை நூறு கண்டு நம்மிடையிலே
வீணிற் கலகம் பலநாம் வளர்க்கின்றோம்.’

இது முருகையன் ஆரம்பகாலத்தில் எழுதிய “எல்லாரும் வாழவேண்டும்” கவிதையின் முதல் பத்தி. (நெடும்பகல். ப.5) ஆசிரிய விருத்தத்தில் அமைந்தது.

மஹாகவியில் போலவே முருகையன் கவிதைகள் சிலவற்றிலும் புதுமைப்பித்தனின் தாக்கத்தைக் காணலாம். நெடும்பகல் தொகுப்பிலுள்ள “கல்நார் உரித்த கவி” கவிதை இவ்வாறு தொடங்குகிறது:

‘வேண்டும் கவிதை; விரைந்தனுப்பித் தாரும் என
‘நாண்டு’கொண்டு ‘நிண்டார்’ நம் ஆசிரியர்-
ஆண்டவனே
என்ன கரைச்சல்? இயலாது பாட்டெழுதல்.
பன்னம் இழைத்தாலும் பாய், கூடை-பின்னல்
கடகம், இவற்றுக்கும் காசு கிடைக்கும்.’ (ப.12)

இதே தொகுப்பிலுள்ள சரமகவிராயர் கவிதையிலும் (ப.121) புதுமைப்பித்தனின் தாக்கத்தை தூக்கலாகக் காணமுடியும்.

‘பழைய செந்தமிழ்ச் சொற்களோடு கிராமியம், வட்டார வழக்குகளையும், ஆங்கில சொற்களையும் தேவையை அனுசரித்து இலக்கியத்திற்குப் பயன்படுத்தும் நெறியை ஊக்கியமை முருகையனின் பங்களிப்பாகும்’ என்கிறார் கைலாசபதி. (பின்னிணைப்பு: மாடும் கயிறு அறுக்கும்; ப.216). புதுமைப்பித்தன் கவிதைகளில் பரிச்சமுள்ளவர்களுக்கு முருகையனின் இந்தப் பங்களிப்பு புதுமையாகத் தோன்றாது. ‘புதுமைப்பித்தன், ரகுநாதன் ஆகியோரின் எடுப்பான கவிதை முயற்சிகளால் உந்தப்பட்டவர் முருகையன்’ என்று கைலாசபதி அதே நூலின் பின்னிணைப்பில் குறுப்பிட்டுள்ளார்.

எழுத்து பிப். 1960 இதழில் ந.பிச்சமூர்த்தி ‘காதின் தொழிலைக் கண் ஏற்கமுடியும்’ என்று கவிதையின் மௌன வாசிப்பு குறித்து எழுதிய கட்டுரைக்கு எதிரொலியாக ‘உணர்ச்சி அனுபவங்களின் கதிகளை’
வெளிப்படுத்த, ‘வசன கவிதைக்காரர்கள் கையாளக்கூடிய ஒரே தந்திரம் அவர்கள் எழுதுகிற வசனங்களின் வரிகள் நீளத்தையோ அல்லது அந்த வரிகள் தொடங்குகிற இடத்தையோ தாம் விரும்பியவாறு அமைத்தல்’ (எழுத்து-மார்ச். 1960) என்று எழுதியிருக்கிறார் முருகையன். பின்னாளில் இவரே அந்தத் ‘தந்திர’ த்தைத் தன் கவிதைகளிலும்- மரபுருவ மற்றும் மரபை மீறிய கவிதைகளிலும்- கையாண்டிருக்கிறார்.

ஈழத்துக் கவிதைகளில் விஞ்ஞானக் கருத்துக்களைப் பொருத்தமாகக் கையாண்டிருப்பதையும் பேச்சோசைத் தன்மையையும் பேச்சுவழக்குச் சொற்களையும் கவிதைகளில் வெகு லாவகமாகக் கையாண்டிருப்பதையும் கைலாசபதி போன்றவர்கள் புதுமையென விதந்து கூறியதுண்டு. இவையெல்லாம் கவிதையின் அமைப்புச் சார்ந்த புதுமைகள் என்பது உண்மைதான் எனினும் ஒரு கவிதையின் சிறப்பம்சம் தனித்துவம், கலை வெற்றி இவற்றையெல்லாம் மீறிய அனுபவத்தின் தீவிரமான பதிவு சார்ந்தது; சுயமான பார்வையும், அதை வெளிப்படுத்தும் மொழியாளுமையும் சார்ந்தது; சுயமான பார்வையும், அதை வெளிப்படுத்தும் மொழியாளுமையையும் சார்ந்தது. அவ்வகையில் முருகையனின் கவிதைகள் கவித்துமான, வீர்யமான அனுபவ வெளிப்பாடுகளாக அமையவில்லை. விஞ்ஞான- புராண- யதார்த்த நிகழ்வுகளை மனோரீதியாக இணைத்துச் சிறப்பான கவிதையாக உருவாகியிருக்கும் பிரமிள் E=MC2 கவிதையுடன் முருகையனின் இத்தகைய கவிதைகளை ஒப்பிட்டுப் பார்க்கையில் இதனை நாம் உணர இயலும். எனினும் தமிழகத்திலும் ஈழத்திலும் அந்தக் காலகட்டத்தில் பெருவாரியாக எழுதப்பட்டு வந்த பாரதி- பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களின் பொற்காலக் கனவுகளாகவோ, அலங்காரச் சொல்லடுக்குக் குவியல்களாகவோ, இல்லாமல் புதிய விஷயங்களை மிகையுணர்ச்சி யில்லாமல் இயல்பாக வெளிப்படுத்தியிருப்பது முருகையன் கவிதைகளில் கவனத்துக்குரியதாகும். மஹாகவியைப் போலவே இவரும் பல நாடகங்களும் குறுங்காவியங்களும் எழுதியிருக்கிறார்.

இந்தக் காலகட்டத்தில் குறிப்பிடத்தகுந்த கவிஞர்களான நீலாவாணன், மு.பொன்னம்பலம் இருவரும் ஐம்பதுகளிலேயே எழுதத் தொடங்கியவர்கள். நீலாவாணனின் “வழி” 1976ல் வெளிவந்தது. இவரது கவிதைகள் மரபுவழிக் கவிதைகள்தாம். ஐம்பதுகளின் பிற்பகுதியிலிருந்தே கவிதை எழுதிவரும் மு.பொன்னம்பலத்தின் “அது” கவிதைத்தொகுதி 1968ல் வெளிவந்தது. சி.சிவசேகரம் ஐம்பதுகளிலேயே கவிதைகள் எழுத தொடங்கிவிட்டபோதிலும் எழுபதுகளில்தான் இவரது கவிதைகள் கவனத்தில் கொள்ளத்தக்கனவாகக் கருதப்படுகிறது.

‘அறுபதுகளில் ஈழத்தில் ‘மண்வாசனை’யை வலியுறுத்திய தேசிய இயக்கமும், இடதுசாரி இலக்கியப் போக்கும் தீவிரமாகச் செயல்பட்ட காலகட்டம். அரசியல் நிலைமையின் தாக்கத்தால் எழுச்சியடைந்த இலக்கிய இயக்கப் போக்குகள் இவை என்றும் சொல்லலாம். 1950, 60களில் முற்போக்கு இலக்கிய இயக்கம் வழிவந்தோர் ஒரு நிலையாகவும் அந்த இயக்கத்தின் வழிவராதவர்கள் இன்னொரு நிலையிலும் உள்ளனர். இதில் கவனிக்கப்படவேண்டிய முக்கிய அம்சம் யாதெனில், இன்று காத்திரமான எழுத்தாளர் எவரும் (அல்லது தம்மைக் காத்திரமான எழுத்தாளர்களாகக் கருதிக்கொள்பவர்கள் எவரும்) தம்மை மார்க்ஸிய எதிர்ப்பாளர்களாகக் காட்டிக்கொள்வதில்லை. மார்க்ஸிய நிறுவனங்களுள் ஏதோ ஒன்றுடன் சம்பந்தப்படுத்திக் கொண்டிருப்பார்’ என்கிறார் கா.சிவத்தம்பி. (ஈழத்துத் தமிழிலக்கியத்தடம்; 1980-200.ப.27) இதன் காரணமாகவே ஈழத்து கவிதை விமர்சகர்கள், கவிஞர்களில் பெரும்பாலனோரும் “எழுத்து” காலக் கவிதைகளைத் ‘தனிமனிதப் புலம்பல்கள்’ என ஒருமித்த குரலில் குறைகூறி வந்தனர். “எழுத்து” காலக் கவிதைகளில் அகவயமான கவிதைப் பார்வை தூக்கலாக இருந்தது உண்மைதான். ஆனால் ஒட்டுமொத்தக் கவிதைப் போக்கையும் அவ்வாறு வகைப்படுத்தி விடவும் முடியாது. புதுக்கவிதையின் முன்னோடியான பிச்சமூர்த்தியின் கவிதைகள் சமுதாயப் பார்வை கொண்ட புறவயமான கவிதைகள்தாம். ‘தனிமையும் விரக்தியையும்’ தன்னை அண்டவிடாத தன்னம்பிக்கை கொண்ட கவிஞர் அவர். இடதுசாரி இலக்கியப் பார்வை அவரது கவிதைகளில் வெளிப்படாததால் - இயக்கங்களை மீறிய சுதந்திரமான கலைஞராக அவர் செயல்பட்டதால்-அவரையும் ஈழத்துக் கவிதை விமர்சகர்கள் ஏனைய “எழுத்து” காலக்கவிஞர்களுடன் சேர்த்தே நிராகரித்து வந்தனர்.

அறுபதுகள் காலக்கட்டத்தில் ஈழத்துத் தமிழ் புதுக்கவிதையில் குறிப்பிட்டுச் சொல்லத்தகுந்தவர் தா.ராமலிங்கம். அறுபதுகளின் முற்பகுதியில் எழுதத் தொடங்கிய இவரது கவிதைகள் இந்தக் காலகட்டத்தில் இரண்டு தொகுதிகளாக “புதுமெய்க்கவிதைகள்” (1964) “காணிக்கை” (1965) வெளிவந்துள்ளன. ஈழத்துப் புதுக்கவிதையின் பொதுத்தன்மையான நெகிழ்ச்சியான அமைப்பு, தூக்கலான சப்த நயம், பேச்சோசைப் பண்பு நிறைந்தவை இவரது கவிதைகள். கிண்டலும் கேலியும் கலந்த அங்கத்துடன் சமுதாய விமர்சனப் பார்வை கொண்ட கவிதைகள் எழுதியவர். இவரது “ஆசைக்குச் சாதியில்லை” கவிதையின் முதல் பகுதி இது:

‘வேளார் குடிப் பிறந்து
பிறர்
ஆசார முட்டையிலே மயிர் பிடிக்கும்
மேல்சாதி நான்!
என்றாலும்
மருந்துக்கு நல்லதென்றால்
கள்
அருந்துவதில் என்ன குற்றம்?
கள் பருகச் சென்றேன்…

“எதிர்காலம்” கவிதையின் ஆரம்பம் வருமாறு:

‘இன்று சலூன்களிலே
கத்தரிக் கோல்களுக்கோ
ஓய்வு உளைச்சல் இல்லை.
நாங்கள்
நித்தம் முகம் வழித்துச்
சித்தம் சிதைந்துவிட்டோம்!
இனி
இயல்பாய் வளரட்டும்
இளைஞர்களே
சுயமாய் ஒளிவிடட்டும்
செயற்கை முறையினிலே
சேறு புழுக்கிறதே!
வாடிக்கையாய் நாங்கள்
வழிப்பயணம் செய்துவந்த
ஒற்றையடிப் பாதை
இனி உதவமாட்டாது!’

ஈழத்துக் கவிஞர்கள் சிலரின் கவிதைகளையும் பிரமிளின் கவிதைகளையும் ஒப்பிட்டுக்காட்டி, ‘ஈழத்து இலக்கிய முயற்சிகளின் பாதிப்பு தருமுவிடம் பரவலாக விழுந்திருப்பதாகக்’ கூறுகிறார் சு.வில்வரத்தினம். (அலை; ஆடி-ஆவணி.1976) அவர் எடுத்துக்காட்டிய ஒப்பீட்டுக் கவிதையில் ஒன்று தா.ராமலிங்கத்தின் காணிக்கை கவிதை.

‘கதி வீசி முடி மினுங்கும்
கலைக்கோயில் முற்றத்துக்
கண்ணாடிப் பொய்கையொன்றில்
பொன்மீன் குடியிருத்த
அலைகடலில்
வலைவீசி துழாவுகையில்
ஓட்டில் கதிர் உதிக்கும்
நண்டு கிடைத்துள்ளது.’
(காணிக்கை. ப.3)

இதனுடன்,

‘திமிங்கிலம் பிடிக்க
கப்பலேறி
கடல் நீரில்
குழி பறித்தேன்
வந்து கவ்வி
வசப்படுமென்று
புலிக்கு இரையாய்
தூண்டிற்புழு தொங்கவிட்டு
மரத்திலே காத்திருந்தேன்

தூண்டில் துளிர்த்து
இலையில் ஊர்ந்து
வசமாயிற்று
புயல்.
நீர் சுழன்று குழிந்து
பிடிப்பட்டது
பிரளயம்’
(கைப்பிடியளவு கடல் ப.93)

என்னும் பிரமிளின் “கவிதை” என்ற தலைப்பிலான கவிதையை ஒப்பிட்டு தா.ராமலிங்கத்தின் கவிதையின் தாக்கம் இந்தக் கவிதையில் உள்ளதாகக் கூறுகிறார் வில்வரத்தினம்.

தா.ராமலிங்கத்தின் கவிதை படைப்பாளி மனநிலையின் எதிர்பார்ப்பினைக் காட்டிலும் நிகழ்வின் விளைவு ஏமாற்றம் தருவதாக அமைந்திருப்பதை வெளிப்படுத்துவது. ஆனால் பிரமிளின் கவிதையிலோ, எதிர்ப்புக்ளைக் காட்டிலும் நிகழ்வின் விளைவுகள் மேலான்மையாகச் சொல்லப்படுகின்றன. மேலும் பிரமிள் கவிதையில் வெளிப்படும் பன்முக அர்த்தத்தளமும் விரிவானது. எனவே ராமலிங்கம் கவிதையின் பாதிப்பில்
பிரமிள் கவிதை எழுதியப்பட்டிருப்பதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

எம்.ஏ.நு-மான், சண்முகம் சிவலிங்கம், அ.யேசுராசா, வ.ஐ.சா.ஜெயபாலன் ஆகியோர் அறுபதுகளின் பிற்பகுதியில் கவிதை எழுதத் தொடங்கியவர்கள். இவர்களில் யேசுராசா, வா.ஐ.சா.ஜெயபாலன் தவிர்த்து ஏனைய இருவரும் எழுதிய காலக்கட்டத்துக் கவிதைகள் மரபு வழி யாப்புருவத்தை நினைவூட்டும் வகையில் அமைந்தவை.

எம்.ஏ.நு-மான், கவிதைகளுடன் இலக்கிய விமர்சனம், மொழியியல் துறைக்கட்டுரைகளும் எழுதுகிறவர். “கவிஞன்” என்னும் காலாண்டிதழை (1969-1970) நடத்தியவர். இவரது ஆரம்பக்காலக் கவிதைகள்,

‘அது ஒரு கொடும் வெயில் நாள்
ஆறுகள் வற்றினவே!
கொதிதணல் எனும் வெயிலின்
கொடுமைகள் முற்றினவே!
விதி இது என அவர்கள்
வீழ்ந்து கிடந்திலரே!
எதுவரை எனினும் அவர்
எழுந்து நடந்தனரே!’

என்பது போன்ற வகைமாதிரியாகவே அமைந்திருந்தன. பொதுவுடைமைச் சிந்தனையுடன் சமுதாயப் பார்வைகொண்ட கவிதைகளை அவர் எழுதினார்.

சண்முகம் சிவலிங்கத்தின் ஆரம்பகாலக் கவிதைகளும் யாப்பு மரபிலிருந்து முற்றாக விலகிவிடவில்லை. இவரது “அவள் நினைவு” (196 8) என்னும் கவிதை இவ்வாறு முடிகிறது:

‘சரசரெனும் மவடியில்
சருகுநிறக்கால் தெரியும்
அலையெறியும் பாவாடை
முழங்காலின் அழகுயரும்
நடைநடையே நடையதுவாய்
நடையினிலே கால் இரண்டு
விடமுடிய ஒரு நினைவாய்
விளையும் ஒரு மனத்திரையில்
கடல் அலைகள் மடிநோக்கி
கரையிலிருந்து மீள்வனவே.’

இக்கவிதையின் உருவம் மட்டுமல்ல, கவிதைக்கான விஷயமும் மரபார்ந்ததே.

வ.ஐ.ச.ஜெயபாலனின் ஆரம்பகாகக் கவிதைகளில் ஓன்றான “பாலி ஆறு நகர்கிறது” (196 8) கவிதையில் ஒரு பகுதி:

‘ஏதுமொரு ஆர்ப்பாட்டம்
இல்லாமல் முன்நோக்கி
பாலி ஆறு நகர்கிறது.
ஆங்காங்கே நாணல்
அடங்காமல் காற்றோடு
இரகசியம் பேசி
ஏதேதோ சலசலக்கும்
எண்ணற்ற வகைப்பறவை.
எழுப்பும் சங்கீதங்கள்
துள்ளி விழுந்து
‘துழும் என்னும் வரால் மீன்கள்.’

தொடர்ந்து வரும் மோனைகள், சப்த ஒழுங்குடன் கூடிய கவிதைகளுடன் தொடங்கிய இவரது கவிதைப்பயணம் எழுபதுகளிலேயே தீவிரம்கொள்கிறது.

இவர்கள் மூவரிலிருந்தும் கவிதையின் உருவ அமைப்பிலும் கவிதைக்கான மொழியிலும் வித்தியாசமாக அமைந்தவை அ.யேசுராசாவின் கவிதைகள். செய்யுள் நடையை விட்டு விலகிய உரைநடைத் தன்மையுடன் கூடிய கவிதை நடையில் எழுதத் தொடங்கியவர். தா.ராமலிங்கத்தின் புதுக்கவிதைகளைவிடவும் இவரது கவிதைகள் செறிவாகவும் இறுக்கமாகவும் கட்டமைக்கப்பட்டவை. அவ்வகையில் தமிழகத்துப் புதுக்கவிதையமைப்பின் தாக்கத்தை இவர் கவிதைகளில் காணமுடியும். உதாரணமாக “கடவுளுக்கு” (196 8) கவிதை:

‘மூடிக்கிடக்கின்ற
சொர்க்கத்தின் கதவுகளைத்
திறந்துவிட்டால்…
மண்ணின் குரலுக்குக்
கேட்கக்கூடும்!
கீழிறங்கி
புழுதி மண்ணின் மேல்
நடந்து வந்தால்
மானிடத்தின்
எழுச்சிகளை வீழ்ச்சிகளை
முற்று முழுதாக
நீரறிதல் கூடும்- கூட
நீர்… வருவீரா?’

இவர்கள் நால்வரும் அறுபதுளின் பிற்பகுதியில் கவிதை எழுதத் தொடங்கியவர்கள். எழுபதுகளிலும் அதன் பின்னருமே இவர்களின் தனித்தன்மையும் கவிதையாளுமையும் அனுபவ வெளிப்படுத்தலின் தீவிரமும் சிறப்பாக வெளிப்பட்டுள்ளன. மேலும் அறுபதுகளில் இவர்கள் எழுதிய கவிதைகளின் எண்ணிக்கையும் குறைவானவைதான்.

ஒப்பீடுகள் :

1. புதுக்கவிதை வரலாறு - ராஜமார்த்தாண்டன் [யுனைடெட் ரைட்டர்ஸ் பதிப்பகம்]
2. ஈழத்து நவீன இலக்கியம் - செல்லையா யோகராசா [கொழும்புத் தமிழ்ச் சங்கம்]

ஒரு எழுத்தாளனின் லட்சிய சாசனம்
(1950ஆம் ஆண்டில் வில்லியம் ஃபாக்னர் நோபல் பரிசு பெற்ற போது அளித்த உரை)
தமிழாக்கம் : தி.க.சி

faulkner_in_paris_l.jpg
இந்த பரிசானது மனிதன் என்ற முறையில் எனக்கு வழக்கப்பெறுவதாக நான் கருதவில்லை. புகழுக்காகவோ, லாபத்திற்காகவோ அன்றி, மனித ஆன்மா என்னும் பொருளில் இருந்து இதுவரையில் இல்லாத முறையில் ஒன்றைப் படைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், என் ஆயுள் முழுவதும் ஆன்ம வேதனையிலும் உழைப்பிலும் நான் உருவாக்கிய ஷ்ரிஷ்டிக்காக இப்பரிசு அளிக்கப்படுகிறது என கருதுகிறேன்.
எனவே, ஒரு அறநிதி என்ற முறையில் தான் இந்த பரிசு என்னுடையது.
இந்த பரிசின் குறிக்கோளுக்கும், தோற்றுவாய்க்கும் ஏற்ப, இதில் உள்ள
பணத்தை ஒருவருக்கு காணிக்கையாக்குவது கடினமான காரியமல்ல. ஆனால், நான் அதை சீரிய முறையில் செய்ய விரும்புகிறேன். இந்த விநாடியை நான் நிற்கும் புகழின் சிகரமாக பயன்படுத்த ஆசைப்படுகிறேன். என்னை போன்று வேதனையும் விசாரமும் நிறைந்த ஷ்ரிஷ்டிப்பணியில் தம்மை ஈடுபடுத்தியுள்ள இளைஞரும் குமரியும் என் பேச்சை செவிமடுக்க வேண்டும் என்பதற்காக, நான் இச்சிகரத்தில் நிற்கிறேன். அவர்களில் ஒருவர் இதே சிகரத்தில் நிற்கக்கூடும்.
இன்று நமது அவலம் என்னவெனில், பொதுவான உலகு தழுவிய மரண பயம் ஆகும். இதை பலகாலம் சுமந்து வந்தோம்; இப்பொழுது அனுபவிக்கவும் திராணி பெற்றுவிட்டோம்!
இன்று நம்மை வருத்திவருவது, ஆன்மாவின் பிரச்சனைகள் அல்ல. ஒரே ஒரு கேள்வி தான் நம்முன் நிற்கிறது. ‘நான் எப்பொழுது தூள் தூள் ஆவேன்?…’ எனவே இன்றைய இளம் எழுத்தாளனோ, எழுத்தாளியோ தன்னுடன் தானே போராடிக்கொண்டிருக்கும் மனித இதயத்தின் பிரச்சனைகளை மறந்துவிட்டார்கள். இத்தகைய உள்மனப்போராட்டம் தான் சிறந்த படைப்பை நல்க இயலும், ஏனெனில், இது தான் எழுதுவதற்கு ஏற்ற விஷயம்; நமது உழைப்பிற்கும், மனவுளைச்சலுக்கும் உகந்த விஷயம்.

அவன் - இன்றைய இளம் எழுத்தாளன் - மறந்துவிட்ட இந்த இதய பிரச்சனைகளை மீண்டும் கற்க வேண்டும்.

அச்சம் தான் அனைத்திலும் அற்பமானது என்பதை அவன் தன் மனதிலும் ஆழப்பதித்துக்கொள்ள வேண்டும். அதன் பின்னர், அவன் அச்சத்தை அறவே மறந்துவிட வேண்டும். அவனது “பட்டறை”யில், “தொழிற்கூடத்தில்” பழம்பெரும் இதய உண்மைகளே நிரம்பியிருக்க வேண்டும். அந்த அனாதையான மெய்ப்பொருள்கள் இல்லாவிடில், அன்பும், தன்மானமும், இரக்கமும், பெருமையும், கருணையும், தியாகமும் ஆகிய மெய்ப்பொருள்கள் இல்லாவிடில், அவனது எந்தப்படைப்பும் கணப்பொழுதில் நசித்து ஒழிந்து போகும். இதை உணர்ந்து செயல்படாதவரையில், அவன் உழைப்பெல்லாம் சாபத்தீடு தான்!
இன்றைய இளம் எழுத்தாளன் காதலைப்பற்றி எழுதவில்லை; காமத்தைப் பற்றி எழுதுகிறான்; மதிப்பு எதையும் எவரும் இழக்காத தோல்விகள் பற்றி
எழுதுகிறான்; எல்லாவற்றிலும் கீழாக இரக்கமோ, கருணையோ, இன்றி எழுதுகிறான். அவனது துன்பங்கள் உலக அறங்களின் துன்பங்கள் அல்ல; அவை வடுப்படாத துன்பங்கள் ! அவன் இதயத்தை பற்றி எழுதவில்லை; சுரப்பிகளை பற்றி எழுதுகிறான். நான் மனிதனின் அழிவை ஏற்க மறுக்கிறேன். மனிதனுக்கு தாங்கும் சக்தி உண்டு என்பதற்காக, அவனை அமரன் என்று அழைப்பது எளிது.

அழிவின் கடைசி மணியோசை, சிவந்த மரணமுலாம் பூசப்பெற்ற அந்திப்போதில், அலைகளின் அரவமற்று வெறிச்சோடி நிற்கும் பாரையில் மோதி, மெல்லத்தேய்கிறது; அவ்வேளையில் கூட ஒரு ஒலி கேட்கும், மனிதனின் அழிக்க இயலாத  மெலிந்த பேச்சுக்குரல் கேட்கும் !…

நான் இக்கருத்தை ஏற்க மறுக்கிறேன். மனிதனால், அழிவைத்தாங்கிக்கொள்ள மட்டுமல்ல; வெற்றிக்கொள்ளவும் முடியும் என்பது என் கருத்தாகும். ஜீவராசிகளில், அவனது குரல் மட்டும் வற்றி வறண்டு, மாய்ந்து மடிந்து போகாமல் இருப்பதால், மனிதன் அமரனல்ல. அவனுக்கு ஆன்மா இருப்பதால், கருணையும் தியாகமும் பொறுமையும் பொருந்திய ஆன்ம சக்தி இருப்பதால், அவன் அமரன்.
ஒரு கவிஞனின், எழுத்தாளனின் கடமை இவ்விஷயங்களை பற்றி எழுதுவது ஆகும். மனிதனின் இதயத்தை புனிதமாக்கி, தொன்மைப்புகழ் சேர்க்கும் துணிச்சலையும், தன்மானத்தையும், பெருமிதத்தையும், நம்பிக்கையையும், கருணையையும், இரக்கத்தையும், தியாகத்தையும் நினைவூட்டி, இடுக்கண்களை தாங்கும் வலிமையை அளித்தல் எழுத்தாளனின் உரிமையாகும்.
கவிஞனின் குரல், மனிதனைப்பற்றிய ஒலிப்பதிவாக மட்டுமின்றி, ஊன்றுகோலாகவும், உரம் மிக்க தூணாகவும் உற்றுழி உதவுமாக மனிதனுக்கு (அழிவைத்) தாங்கும் ஆற்றலையும், வென்று வாழும் வலிமையையும் நல்குமாக.

உரையின் ஆங்கில வடிவம் : http://www.rjgeib.com/thoughts/faulkner/faulkner.html

உரையின் ஒலி வடிவம் :http://town.hall.org/radio/HarperAudio/080294_harp_ITH.html

cofield.jpg

வில்லியம் ஃபாக்னர் 1897 செப்டம்பர் 25ஆம் தேதி மிஸிஸிப்பியில்
ஆக்ஸ்போர்டுக்கு அருகே உள்ள நியூ ஆல்பனியில் பிறந்தவர். இளமையிலேயே மிஸிஸிபி சர்வகலா சாலையைவிட்டு கனடாவின் விமானப்படையில் சேர்ந்தார். ஒரு விமான விபத்தில் சிக்கி காயமடைந்து அமெரிக்காவிற்குத் திரும்பினார். நியூ ஆர்லியன்ஸுக்கு சென்று ஷெர்வுட் ஆண்டர்சனுடன் தங்கி சில கட்டுரைகள் எழுதத்தொடங்கினார்.

நியூயார்க்கிலும் ஆக்ஸ்போர்டிலும் சிறிது காலம் சுற்றுப்பிரயாணம் செய்து
பின் ஆக்ஸ்போர்டுக்கு திரும்பி ஒரு இயந்திர சாலையில் இரவு வேளைகளில் கரி அள்ளும் வேலையில் அமர்ந்தார். இங்குதான் தம்முடைய சிறந்த நாவல்களை திருத்தி எழுதினார். 1931ல் எழுத்து மூலமே வாழ்க்கை நடத்துவது அவருக்கு சாத்தியமாயிற்று. 1939ல் அவருக்கு ஓ. ஹென்றி ஞாபகார்த்தப் பரிசு கிடைத்தது. தேசிய கலை இலக்கிய கழகத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். புது அமெரிக்க நாவல் இலக்கியத்திற்கு அவர் செய்த சேவைக்காக அவருக்கு 1949ல் நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இதன் பிறகு உலகத்தின் கவனம் அவருடைய எழுத்துகளின் மீது திரும்பியது.

(”வில்லியம் ஃபாக்னர் - சில கதைகள்” என்ற நூலிலிருந்து : வ.உ.சி நூலக வெளியீடு)

Robert Lee Frost

1874ல் அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோ பிரதேசத்தில் பிறந்தவர். பதினோரு வயதில் தந்தையின் மறைவு அவரை பாதித்தது. மிக இளமையிலேயே சக பெண் ஒருவரை (காதல்வயப்பட்டு) மணந்துகொண்டார். 26வது வயதில் அவர் நியு இங்கிலாந்துப் பண்ணைகளின் விவசாயி - கவிஞன் என்கிற பாத்திரத்தின் தொடக்கமாக, நியு ஹாம்ப்ஷயரின் சிறியதொரு பண்ணையில் தன்னை நிறுத்திக்கொண்டார். அவரின் குடும்பத்தினரின் மரபணுக்களில் ஏதோ குறைபாடிருந்தது. நாற்பதாண்டுகால ஆழமும், வேட்கையும் கொண்டிருந்த திருமணவாழ்வு, அவரின் மனைவியின் மறைவிற்குப் பின் திரு ஃபிராஸ்ட்டை இங்கிலாந்து பயணிக்கச் செய்தது. அங்கு அவரது முதல் தொகுப்பு “A Boy’s Will” வெளியாகி, விமர்சன ரீதியிலான வெற்றிகண்டது. எஸ்ரா பவுண்டின் கவனமும் இவரின் மேல் படிந்தது.

1914ல் இரண்டாவது தொகுதி “North of Boston” மிகப்பெரும் வெற்றியை ஈட்டித் தந்தது. அடுத்த ஆண்டு நாடு திரும்பினார். மிக்சிகன் - அம்ஹெர்ஸ்ட் பலகலைக்கழகங்களில் பேராசிரியராக விளங்கினார். கதே, தாமர் ஹார்டியைவிடவும் நீண்ட ஆயுள் கொண்டிருந்த அவர், தன் இலக்கியத்தரங்களைக் காப்பாற்றினார்.அதிலே அவர் எளிமையாயும், உன்னதமாகவும் இருந்தார். நகர்கின்ற மணல் திட்டில் கீழ்மட்டத்தில் எங்கோ ஓரிடத்தில் திடமான பாறை காணப்பட்டது. அவர் மடியும் மட்டும் அது நீடித்தது. அதுபோலவே, ஒரு போதும் திருப்தியுறாத அதீத வேட்கையும் இருந்தது. மாபெரும் கவிதைகள் எழுத விரும்பினார். டி.எஸ்.எலியட் பெற்றிருந்த அங்கீகாரம் தனக்கு வேண்டுமென விரும்பினார். வரலாற்றில் யாருக்கும் கிடைக்காத அறுதி அங்கீகாரம் எலியட்டுக்கு கிடைத்திருந்தது. எலியட் நோபல் பரிசை வென்றிருந்தார். எனவே 1960ல் நோபல் பரிசு தனக்கு கிட்டவில்லையென மிகவும் வருந்தினார், பிற்பாடு கலகலப்பாகிவிட்டார். அவரது 88ஆவது வயது வரையிலும் அவரை கௌரவங்களும், பதக்கங்களும் தேடிவந்தவண்ணமிருந்தன. நான்கு புலிட்ஸர் பரிசுகள் கிடைத்திருந்தன. ஆனால் நோபல் பரிசை இன்னும் வென்றபாடில்லை. 1963ல் அவரது பெயர் நோபல் பரிசுக்காக ராபர்ட் க்ரேவ்ஸ் முன்மொழிந்திருந்த கடிதத்தை அவரது நீண்டகால நண்பர் அண்டர் மேயர் வாசித்துக் காட்டினார். அதன்பின் ஒருவாரம் கழித்து இறந்துபோனார் ஃபிராஸ்ட்.

“Variety of men” (C.P. Snow / Mc Millen, 1967 - நூலிருந்து)

ராபர்ட் ஃபிராஸ்ட் கவிதைகள்
மொழியாக்கம் : சா.தேவதாஸ்

போகாத பாதை

மஞ்சள் வனமொன்றில் இருபாதைகள் பிரிகின்றன
இரண்டிலும் போகமுடியாதது வருந்த வைக்கிறது
ஒரு பயணியான நான் நீண்டநேரம் நின்று
என்னால் முடிந்தமட்டும் ஒன்றையொன்று உற்று நோக்கினேன்.
ஒன்று புதரில் எங்கே வளைந்து திரும்புகிறதென்று
மற்றொன்று சீரியதாய் இருந்தது இன்னும்
தடங்கள் படியாது புல் நிறைந்ததாயும்
அக்காலையில் இரண்டும் சமமாகக் கிடந்தன.
எந்தக் காலடியும் பதிந்திராத இவைகளில்
முதல் பாதையை இன்னொரு தினத்துக்கு ஒதுக்கினேன்!
ஒருபாதை இன்னொன்றாகக் கிளைத்துச் செல்வதறிந்ததும்
திரும்பி வருவேனா என்று சந்தேகித்தேன்.
இதனை பெருமூச்செறிய கூறிக்கொண்டிருப்பேன்
பல யுகங்கள் கழித்தும்
வனமொன்றில் இருபாதைகள் பிரிந்தன, நான்
இதுவரை போகாத பாதையைத் தெரிவு செய்தேன்.
அதுதான் உண்டாக்கியது எல்லா வித்தியாசங்களையும்.

*********************************

தொலைவாகவும் இயலாது ஆழமாகவும் இயலாது

கடற்கரை ஓரமாய் உள்ளவர்கள்
திரும்பி ஒரே திசையில் நோக்குகின்றனர் எல்லோருமாக.
தம் முதுகைத் திருப்புகின்றனர் நிலத்திற்கு
நாளெல்லாம் நோக்குகின்றனர் கடலினை.
கப்பலொன்று தன் உடற்பாகத்தை உயர்த்திக் கொண்டிருக்கிறது
எவ்வளவு முடியுமோ அவ்வளவு
ஈரத்தரை பிரதிபலிக்கிறது புல்போல
நிற்கும் கடற்காகத்தை.

நிலம் வேறுபடக்கூடும் மேலும்
ஆனால் நிஜம் எதுவாயினும்
நீர் வந்து சேர்கிறது கரைக்கு
மக்கள் பார்க்கின்றனர் கடலினை

அவர்களால் தொலைவாக பார்க்க முடியாது
அவர்களால் ஆழமாகப் பார்க்க முடியாது
ஆனாலும் எப்போதேனும் தடையிருந்தா
அவர்களின் கவனிப்புக்கு.

*********************************

பனிப்பாலைப் பகுதிகள்

பனி வீழ்வும் இரவு கவிழ்தலும் விரைவாக
கடந்த காலத்துள் போய்க்கொண்டிருந்ததாக நான் கண்ட வயலில்
தரை அநேகமாய் பனியால் மூடுண்டது மிருதுவாய்
ஆனாலும் தலைகாட்டும் சில புல்வண்டுகள்
அதனைச் சூழ்ந்திருந்த வனங்கள்
கொண்டிருந்தன அவற்றினுடைவைகளை
விலங்குகளெல்லாம் அடைந்து கிடக்கும் தம் குகைகளில்
எண்ணிப்பார்க்க மறந்தவனாய் இருக்கின்றேன்
நானறியாதபடி என்னை உள்ளடக்கிக் கொள்ளும் தனிமை.

தனித்திருக்கும் அத்தனிமை
தான் தணிவதற்குள் மேலும் தனிமை கொள்லும்
இருளார்ந்த பனியின் வெண்விரிப்பாக
உணர்வு பலமற்று, வெளிக்காட்ட ஏதுமின்றி.

வெற்று வெளிகளில் அவை கலவரப்படுத்த இயலாது என்னை
மானுட இனம் இல்லாத நட்சத்திரங்களுக்கிடையே
என் வீட்டருகே கொண்டிருக்கிறேன் அதனை
இப்பாலைவனப் பகுதிகளாலேயே என்னைக் கலவரப்படுத்த.

*********************************

சூது

பருத்த வெண்சிலந்தி ஒன்றைக் கண்டேன்
வெள்ளை மூலிகைச் செடிமேல் பூச்சியொன்றை கவ்வியபடி
கெட்டியான வெண்பட்டுத் துணிபோல
மரணம் மற்றும் நோயின் பாத்திரங்கள்
ஆயத்தமாயுள்ளன காலை நாடகத்தை ஆரம்பிக்க
சூனியக்காரியின் கஷாயத்தில் சேர்ந்திருப்பவைபோல
ஒரு பனித்துளி சிந்தி, மலர் நீர்க் குமிழியாக
மற்றும் காகிதப் பருந்தென தூக்கிச் செல்லப்படும் உயிரற்ற சிறகுகள்.

வெண்மையாய் இருப்பதற்கும்
பாதையோரத்து நீலத்திற்கும் மற்றும் மாசற்ற மூலிகைக்கும்
அம்மலருக்கும் என்ன சம்பந்தம்?
உச்சியில் சிலந்தியை நிறுத்தி
அப்புறம் இரவில் வெண்பூச்சியை அங்கு செல்ல வைத்தது எது?
திகைப்புறச் செய்யும் இருளின் சூதன்றி வேறென்ன?
எவ்வளவு அற்பமானதெனினும் கட்டுப்படுத்தும் சூது.

ஒப்பீடுகள்:

1. www.wikipedia.org
2. Princeton University Library Website
3. புது எழுத்து சிற்றிதழ்

பாமுக் (My Name is Red புத்தகத்துடன்)

அரசியலைக் குறித்து பாமுக் வெளிப்படுத்தும் கருத்துக்களைவிட, அவரது படைப்புகளில் மிளிரும் கருத்துகள் மிகவும் புத்திசாலித்தனமானவை.
—ஒரு விமர்சனத்திலிருந்து.

படைப்புகள்:

1. Darkness and Light (1979)
பின்னாளில் Mr. Cavdet and his Sons (1982) என்ற பெயரில் வெளியானது பெரியதொரு ஆலமரத்தின் விழுதுகளென பிள்ளைகள் நிரம்பிய குடும்பத்தையும், செல்வ வளமிக்க அதன் மூன்று தலைமுறைகளையும் பற்றிப் பேசுகிறது இந்த நாவல். தாமஸ் மன்னின் (Thomas Mann) பாணியில் எழுதப்பட்டது.

2. The Silent House (1983)
துருக்கி நாடு உள்நாட்டுப் போரின் விளிம்பிலிருந்த 1980-களில், கடற்கரை வாசஸ்தலமொன்றில் வசிக்கும் மூதாட்டியை குடும்பத்தினர் காணச் செல்லும் நிகழ்வு 5- வெவ்வேறு கோணங்களில் விவரிக்கப்படுகிறது. இவ்வுறவினர்களிடையே நிகழும் அரசியல் விவாதங்கள் மற்றும் நட்பு ஒரு குறியீடாக மாறி, நாட்டிலிருக்கும் பல்வேறு தீவிரவாத அமைப்புகளின் அதிகாரப் போட்டியினால் உருவாகிற சமூக குழப்பத்தை எதிரொலிக்கிறது.

3.The White Castle (1985)
ஒரு இத்தாலியப் பொறியாளரின் விவரிப்பில் விரிகிறது புதினம். நவீன மயமாதலையும் அதன் முரண்நகையையும் விளக்குகிறது. 17-ம் நூற்றாண்டில், வெனிஸிலிருந்து நேப்பிள்ஸ் நகருக்குப் பயணமாகின்ற இத்தாலியப் பொறியாளர் ஒருவர் துருக்கியர்களால் சிறைபிடிக்கப் பட்டு ஹோஜோ என்பவனிடம் அடிமையாக்கப் படுகிறார். ஹோஜோ, அய்ரோப்பியர்களிடமிருந்து அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், வானசாஸ்திரம் ஆகிய துறைகளின் வளர்ச்சி நவீனங்களை அறிந்து கொள்வதன் மூலமாக ஒட்டமான் சாம்ராஜ்ஜியத்தின் மகத்துவத்தை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று நம்புகிறான். ஆனால், ஒரு நிலையில் தகவல்களின் பரிமாற்றம் என்ற பெயரில் தங்களின் அந்தரங்கமான ரகசியங்களை பரிமாறிக்கொள்வதில், இருவரின் சுய அடையாளங்களும் இடம் மாறுவதை உணர்ந்து ஹோஜோ ஆச்சரியப்படத் துவங்குகிறான்.

4. The Black book (1990)

இஸ்தான்புல் நகரத்தின் வழக்கறிஞர் ஒருவரின் மனைவி தலைமறைவாவதில் தொடங்குகிறது நெடுங்கதை. காணாமல் போன தனது மனைவியை அவளின் சகோதரன் (மாற்றாந்தாய் மகன்) எங்கோ மறைத்து வைத்திருக்கிறான் என்று சந்தேகப்படுகிறார் வழக்கறிஞர். பத்திரிக்கையில் பத்திகள் எழுதும் அவனை தேடும்போது அவனும் காணாமல் போயிருப்பது தெரிய வர, அவர்களிருவரையும் தேட தலைப் படுகிறார். ஒட்டமான் சாம்ராஜ்ஜியத்தின் காலத்திலிருந்த இஸ்தான்புல் மற்றும் நிகழ்காலத்தில் இருக்கின்ற இஸ்தான்புல் என இரண்டையும் இணைத்துப் பார்க்க முயல்கிறார் பாமுக்.

5. The New Life (1995)
இளம் மாணவன் ஒருவன் தான் வாசிக்கின்ற ஒரு புத்தகத்தினால் தனது பழைய வாழ்க்கை மற்றும் அடையாளங்களிலிருந்து வேரோடு களைந்தெறியப்படுகிறான். தனக்கு அமைந்த புதிய வாழ்க்கையில் ஓர் அழகிய பெண்ணுடன் காதல் வயப்படுகிறான். அதன் பின் காதலில் முளைக்கும் போட்டி, கொலை முயற்சி என சுவாரசியமான சம்பவங்களோடு நகர்கிறது நாவல்.

6. My name is Red (199 8)
புத்தகங்களின் ஓரங்களை அலங்காரம் செய்யும் நுண் ஓவியர்களின் வாழ்வைப் பற்றியது. 16-ம் நூற்றாண்டில் துருக்கியை ஆண்ட சுல்தான் தனது ராஜ்ஜியத்தின் பெருமைகளை விளக்கும் புத்தகம் ஒன்றிற்கு அலங்கார ஓவியங்கள் வரைவதற்காக நுண் ஓவியக்கலையில் தேர்ச்சி பெற்ற ஓவியர்களை நியமிக்கிறான். இந்த ஓவியங்கள் மேற்கத்திய சாயல் கொண்டதாக அமைய வேண்டும் என்று விரும்புகிறான். இஸ்லாமிய ஓவியன், உலகை கடவுள் ஏற்படுத்தி இருக்கும் ஒழுங்கமைவின்படி சித்திரங்களை உருவாக்குகிறான். மேற்கத்திய ஓவியன், உலகைத் தன் பார்வையின் வழியாக அவதானித்தும் உணர்ந்தும் பதிவு செய்கிறான். ஆகவே இரண்டும் எதிரெதிர் நிலைகள் கொண்டவை. சுல்தான் விரும்புகிற இந்த மரபை மீறிய சித்திரங்கள் தீட்டும் பணி ரகசியமாக நடைபெறுகிறது. அப்போது பணியில் ஈடுபட்ட ஓவியன் காணாமல் போகிறான். அதனை அடுத்து நாவலில் ஏற்படும் திருப்பங்கள் அற்புதமானவை. மேலும், பல குரல்களில் விரிகிறது நாவல். (கிணற்றில் மிதக்கும் பிரேதம், கொலையை நேரில் கண்ட நாய் என பட்டியல் நீள்கிறது).

7. Snow (2000)
சொந்த மண்ணில் நிலவிய அரசியல் சூழல்களால், ஜெர்மனியில் ஃபிராங்க்பர்ட் நகரில் பத்து வருடங்களாக அகதியாய் வசித்து வந்த ‘கா’ என்ற கவிஞர் துருக்கிக்கு திரும்புகிறார். கணவனைப் பிரிந்த தனது பழைய நண்பியை சந்திக்கவும், ஒரு பத்திரிக்கையாளனாக வாழ்வைத் தொடரும் பொருட்டும், துருக்கியின் வட கிழக்கில் இருக்கும் “கார்ஸ்’ என்ற நகரை அடையும் அவரின் பார்வையில் சுழலத் துவங்குகிறது புதினம். இஸ்லாமிய அடிப்படை வாதிகளுக்கும் மதச்சார்பற்றவர்களுக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் “கார்ஸ்” நகரம் (மேற்கின் தாக்கம் பெற்ற துருக்கியரும் துருக்கியின் இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் இயங்கும் இஸ்தான்புல் நகரை குறியீடாகக் காட்டுகிறது). கார்ஸ் நகரம் உறைப்பனி பொழிவில் சிக்கி உலகின் மற்றப் பகுதிகளிலிருந்து துண்டிக்கப் படுவது (துருக்கி உலகின் மற்ற நாடுகளிடமிருந்து அறிவியல் தொழில்நுட்பம், தாழ்வு மனப்பான்மை ஆகியவற்றால் தனியாவது என்ற குறியீடாக வெளியாகிறது). கார்ஸ் நகரில் தொடராக நிகழும் பெண்களின் தற்கொலைகள், ‘கா’ சந்திக்கும் தீவிரவாதி, காவிற்கும் அவது பழைய நண்பிக்கும் இடையே நிகழும் இழையறாத நட்பு என் பல அடுக்குகளைக் கொண்ட இந்த புதினம் அரசியல் ரீதியாக மட்டுமின்றி இலக்கிய மட்டத்திலும் ஒரு முக்கியமான புத்தகம்.

8. Istanbul : Memories of a City (2005)

தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வரும் நகரத்தை குறித்து பாமுக் எழுதியுள்ள இந்த தொகுப்பு ஒரு பாதி நினைவுக்குறிப்பாகவும் மறு பாதி பெரும் மரியாதைக்குரிய அர்ப்பணமாகவும் விரிகிறது.
இஸ்தான்புல் நகரமானது,

ஆசியா- ஐரோப்பா
கிழக்கு - மேற்கு
கிறிஸ்தவம்- இஸ்லாம்

ஆகியவைகளின் குறுக்குச் சாலைகளில் அமைந்துவிட்டது. ஒரு காலத்தில் பைசன்டைன் மற்றும் ஒட்டமான் சாம்ராஜ்ஜியங்கள் கோலோச்சிய நகரம். மேற்சொன்னவைகளின் மூலமாக கலாச்சாரம் மற்றும் வளமான சரித்திரக் கலவை உருவானது மாத்திரமல்ல தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதில் ஏற்பட்ட குழப்பமும் சேரும். இத்தகு பின் புலங்களால் இந்நகரின் மக்களுக்கு தங்களது உறவுகளின் வேர்களைக் குறித்த சந்தேகமும் பாதங்கள் பாவியிருக்கும் பல்கூறு கலாச்சாரங்களிலிருந்து தங்களின் அடையாளத்தை மீட்டெடுப்பது குறித்த ஐயப்பாடும் அடங்கும்.

இதனிடையே பாமுக் தனது குழந்தைப் பருவம் கூச்சலும் குழப்பமும் மிகுந்த பெரியதொரு குடும்பத்தில் கழிந்த விதத்தையும் அதனின்று துருக்கிய ஓவியர்கள் மற்றும் எழுத்தாளர்களை அவர் கண்டறிந்ததையும் அவர்கள் எவ்வாறு பாமுக்கின் வாழ்வை பாதித்தார்கள் என்பதையும் தெளிவாக கூறுகிறார்.

இஸ்தான்புல் நகரத்தின் பண்டைய செழுமையைக் குறித்து நேர்மையுடனும் வியப்புடனும் அவரது எண்ணங்கள் அசைபோடுகின்றன.

9. Other Colors

1999ல் வெளியான இந்த கட்டுரைத் தொகுப்பு அடக்குமுறையின் கீழ் வாழும் குர்த் இன மக்களின் மீது நிகழும் வன்முறையைப் பற்றி பேசுகிறது. 2008ம் ஆண்டு வசந்தத்தில் இது ஆங்கிலத்தில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

10. Museum of Innocence

அடுத்த நாவலுக்கான முயற்சிக்களில் இப்போது மிகுந்த முனைப்புடன் ஈடுபட்டிருக்கிறார் பாமுக்.

இவை தவிர அவர் The Secred Face என்ற திரைப்படத்திற்கு திரைக்கதையும் எழுதியுள்ளார்.

இலக்கிய கடத்தல் அல்லது இலக்கிய திருட்டு:

இலக்கிய கடத்தலுக்கான விமர்சனமும் பாமுக் மீது வீசப்பட்டது. அவரது “The White Castle”, நாவலின் சில பகுதிகள் இன்னொரு நாவலிலிருந்து திருப்பட்டது என்பதே அது. அதை மறுக்காமல் ஒப்புக்கொண்டு இன்னொரு நாவலின் பெயரை மிகத்தாமதமாகவே தனது ஒப்பீடுகளின் வரிசையில் சேர்த்தார்.

அவரை ஆதரித்துப் பேசும் விமர்சகர்கள் இத்தகு தன்மை பின்நவீனத்துவத்தில் காணப்பெறும் “intertexuality”யே (ஒரு எழுத்தாளரின் படைப்பில் பல்வேறு இதர படைப்புகளின் சாரம், பகுதிகள் இடம் பெறுவது) என்பது அவர்களின் வாதம். இதை இலக்கிய திருட்டு என்று கொள்வது கூடாது. உதாரணமாக, Umberto Ecoவின் The name of the Rose என்ற படைப்பில் பல்வேறு இதர நாவல்களின் சாரம் இடம் பெறுவது நாம் கவனிக்கலாம். ஆனால் படைப்பின் இறுதியில் நூல் ஒப்பீடுகளின் பட்டியலில் அவையாவும் இடம் பெற்றுள்ளன. ஆனால் பாமுக்கின் படைப்புகளில் அவ்வாறு இடம் பெறாததை ஒரு குற்றச்சாட்டாகவே பாமுக்கை குறைகூறும் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

இவையனத்திற்கும் ஓர்ஹான் பாமுக்கின் வாய் பதில் பேசாமலிருந்தாலும் அவரின் மனசாட்சி அதே மவுன மொழியைப் பேசாது என்று நாம் நம்பும் அதே சமயத்தில், ஒரு தனி மனிதனுக்குள் ஊடாடித் திரிந்து அவ்வப்போது அவனது மன எழுச்சிகளில் மற்றும் வீழ்ச்சிகளில் பங்குபெற்று ஓயாது புத்துயிர் பெற்றலையும் அந்த இரண்டாவது குரலை மிக நேர்த்தியாக அவரது படைப்புகளில் பதிவு செய்திருப்பது அவரை ஒரு தன்னிகரற்ற படைப்பாளியாக காலத்தை தாண்டி முன்னிருத்துகிறது.

ஒப்பீடுகள்:

1. http://en.wikipedia.org/wiki/Orhan_Pamuk
2. http://www.orhanpamuk.net/
3.http://www.theparisreview.org/viewmedia.php/prmMID/5587
4. http://en.wikipedia.org/wiki/Kurdistan
5. http://en.wikipedia.org/wiki/Armenia

கடந்த காலத்தில், முப்பதாயிரம் “குர்த்” (Kurd) இன மக்களும் ஒரு மில்லியன்
ஆர்மீனியர்களும் துருக்கியின் நிலப்பகுதிகளில் கொல்லப்பட்டார்கள். ஆனால் இன்று நம்மில் எவருக்கும் அதைப் பற்றி பேச துணிவில்லை.
—- ஓர்ஹான் பாமுக்
(பிப்ரவரி -2005ல் சுவிஸ் நாட்டுப்பத்திரிக்கையொன்றுக்கு அளித்த நேர்காணலில்)

ஓர்ஹான் பாமுக்

துருக்கி நாட்டிற்கு முதல் நோபல் பரிசு, அதுவும் இலக்கியத்திற்கான நோபல் பரிசை பாமுக் பெற்றுத் தந்திருப்பது கொண்டாடத் தகுந்த விசயம்தான். ஆனால் கடந்த 30 ஆண்டுகளாக எழுத்துத்துறையில் இயங்கி வரும் பாமுக்கின் கருத்துக்களும், எழுத்தின் கூறுகளும் சர்ச்சைக்குரியனவாகவே இருந்து வந்துள்ளன. அவர் மேலே சொன்ன கருத்துக்கு வரலாற்றிலிருந்து எடுத்தாளப்பட்ட கீழ்காணும் மூன்று பத்திகளை நீங்கள் படிப்பது தவிர்க்கவியலாததாகிறது.

இளம் துருக்கியர் இயக்கம்:

துருக்கி நாட்டை ஆண்டு வந்த ஒட்டமான் பேரரசு தனது இறுதிக் காலத்தில் வலிமை குறைந்து விளங்கியது. அந்த சமயம் ராணுவத்தில் இருந்த இளைஞர்கள் ஒன்றுகூடி வெற்றிகரமாக ஆட்சிக்கவிழ்ப்பு செய்து அரசைக் கைப்பற்றினர். அதன்பின் “இளம் துருக்கியர் இயக்கம்” என்று தங்களுக்கு பெயர் சூட்டிக்கொண்டு அவர்கள் ஈடுபட்ட செயல்கள் வரலாற்றில் படிந்த கறைகளாகவே எஞ்சுகின்றன. 1913 முதல் 1918 வரை இந்த இயக்கம் துருக்கியை தனது பிடியில் வைத்திருந்தது. அவர்கள் ஆட்சிக்காலம் “துருக்கியின் இருண்ட காலம்” எனலாம்.

குர்த் இன மக்கள்:

இரான், இராக், சிரியா, துருக்கி ஆகிய நாடுகளில் குர்த் இன மக்கள் வாழும்நிலப்பகுதிகள் கூட்டாக குர்திஸ்தான் என்று அழைக்கப்படுகிறது. மேலே குறிப்பிட்ட எல்லா நாடுகளிலும் இன்றும் இந்த சிறுபான்மை இன மக்கள் வாழ்கிறார்கள். துருக்கியின் தென்கிழக்குப் பகுதியில் அதிக எண்ணிக்கையில் வசித்து வந்த இவர்கள் மீது 1915 - 1917 கால கட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் கணக்கிடலங்காது. துப்பாக்கிச்சூடு, குர்த் கிராமங்கள் சூறையாடல், விடவாயுப் பிரயோகம், விமானத் தாக்குதல் என தொடர்ந்த தாக்குதல்களில் 30,000 குர்த் இன மக்கள் கொல்லப்பட்டனர். இளம் துருக்கியர் இயக்கத்தால் நிகழ்த்தப்பட்ட இந்த இனப் படுகொலை துருக்கியின் மேல் படிந்துவிட்ட தீராத களங்கமாகும்.

ஆர்மீனியா:

முதலாம் உலகப்போரின் போது தன் எல்லைப் பிரதேசமான (அப்போதைய சோவியத் யூனியனின் பகுதியாக இருந்த) ஆர்மீனிய நிலப்பரப்பின் மீது தாக்குதல் நடத்தி தனது கட்டினுள் கொண்டுவந்த இளம் துருக்கியர் இயக்கம் அங்கும் வெறியாட்டம் போட்டது. அதன் விளைவாக ஒரு மில்லியன் ஆர்மீனிய மக்கள் “இனப்படுகொலை” செய்யப்பட்டனர்.

உலகின் பெரும்பாண்மையான நாடுகள் “இனப்படுகொலை” என்று இடித்துரைக்கும் மேற்சொன்ன நிகழ்வுகளை துருக்கி நாடு “உலகப்போரில் பலியானோரின் எண்ணிக்கை” எனத் திருத்துகிறது.

துருக்கியின் பாரம்பரியத்தையோ, அதன் குடியரசையோ அவமானப்படுத்தும் வகையில் பேசும் எவரும் “தேசத்துரோகி” என குற்றம் சுமத்தப்பட்டு ஆறு மாதங்கள் முதல் மூன்று வருடங்கள் வரை சிறை வைக்க துருக்கிய அரசு 2005ல் ஒரு சட்டம் பிறப்பித்தது.

படுகொலையான மக்கள் சிந்திய செங்குருதி நிலம் உறிஞ்சியது போக வாய்க்காலாய் வழிந்தோடி துருக்கியின் போஸ்போரஸ் நதியில் கலந்தோடச் செய்த துருக்கியின் பாரம்பரியத்தைத்தான் ஒர்ஹான் பார்முக்கின் நேர்காணல் (கட்டுரையின் துவக்க வரிகளில்) குறிப்பிடுகிறது.

பாமுக் மீதான வழக்குகள்:

பாமுக் மீது உடனடியாக குற்றம் சுமத்தப்பட்டு இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2005 டிசம்பரில் நடந்த விசாரணை முடிவில் துருக்கியின் இராணுவத்தை அவமானப்படுத்திவிட்டார் என்ற குற்றச்சாட்டு விலக்கிக்கொள்ளப்பட்டது. இருப்பினும் “துருக்கியின் பாரம்பரியத்தை” விமர்சித்த குற்றச்சாட்டு விலக்கிக்கொள்ளப்படவில்லை. மேலும் இந்த வழக்கு நீடித்தது. இதனிடையே “ஐரோப்பிய ஒன்றியம்” இவருடைய விசாரணையில் கவனம் செலுத்த “பார்வையாளர் குழு” ஒன்றை துருக்கிக்கு அனுப்பியது. உலகின் பல்வேறு நாடுகள் அவருக்கு ஆதரவாக முழக்கமிட்டன. தவிர, ஜோஸ் சரமாகோ, கேப்ரியேலா கார்சியா மார்க்குவேஸ், குந்தர் கிராஸ், உம்பர்தோ எக்கோ, கார்லோஸ் ப்யூன்டஸ், ஜான் அப்டைக், மாரியோ வர்கஸ் லோசா, யுவான் குவைத்திசோலோ ஆகிய பிரபலமான எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து பாமுக்கிற்கென எழுப்பிய குரலும் இதில் அடங்கும்.

இறுதியாக துருக்கிய நீதித்துறையமைச்சகத்திடம் ஒப்புதலுக்கென்று வந்த இவரது இரண்டாவது வழக்கிற்கு ஒப்புதல் அளிக்க அமைச்சகம் மறுத்துவிட்டது. எனவே இவர் மீதிருந்த இரண்டாவது வழக்கும் ஜனவரி 2006ல் கைவிடப்பட்டது.